வங்காளதேசத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரிப்பு
By: Karunakaran Wed, 29 July 2020 08:49:10 AM
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 1.60 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா காரணமாக இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது, வங்காளதேசத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.30 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,29,185 ஆக அதிகரித்துள்ளது.
வங்காளதேசத்தில் கொரோனா காரணமாக, 35 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவில் இருந்து 1.27 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 16-வது இடத்தில் உள்ளது.