ஈரானில் கொரோனா உயிரிழப்புகள் 3 மடங்கு அதிகமாக இருக்கலாம் என ஆய்வில் தகவல்
By: Karunakaran Tue, 04 Aug 2020 11:29:03 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஈரானில் இதுவரை சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா காரணமாக இதுவரை 17 ஆயிரத்து 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளால் பொருளாதாரத்தடைகளை சந்தித்து வரும் ஈரானில் மருத்துவ உள்கட்டமைப்பு போதிய வளர்ச்சி அடையவில்லை. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக, அந்நாடு திணறி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்ன என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசின் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம் என பிபிசி செய்திநிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, வைரஸ் பரவத்தொடங்கிய நாள் முதல் ஜூலை 20 வரை ஈரானில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு மக்களிடம் தெரிவிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையை விட ரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது.