கொரோனா இறப்பு எண்ணிக்கை தினமும் குறைந்து வருகிறது; முதலமைச்சர் தகவல்
By: Monisha Fri, 11 Sept 2020 5:22:05 PM
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 5,500 பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. தற்போது 7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதே, அரசின் நடவடிக்கைக்கு சான்றாகும். கொரோனா நோய்ப்பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிப்பை படிப்படியாக குறைத்துள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89% பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததால் இறப்பு எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளோம். வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர். மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன.
காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள்வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இறப்பு எண்ணிக்கையும் தினமும் குறைந்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.