முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை
By: Nagaraj Fri, 21 Aug 2020 12:20:34 PM
மாஸ்க் இல்லாமல் வந்தால் கொரோனா பரிசோதனை... தூத்துக்குடியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மாஸ்க் இல்லாமல் சுற்றும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் உஷாராகி மாஸ்க் அணிந்து செல்ல தொடங்கி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் பெற்றிருந்தாலும், கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது .
இ-பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படுவதால், ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரித்து விடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக முகக் கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி வருவோரை மறித்து
அவர்களை அழைத்துச்சென்று கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர். மாஸ்க்
இல்லாமல் சென்ற பெரியவரை மடக்கிய சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை கொரோனா
சோதனைக்கு அழைக்க அவர் பதறிப் போனார். முகக் கவசம் அணியாமல் சென்றால்
சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் என்ற பேதமில்லாமல் அனைத்து
ஓட்டுனர்களுக்கும் இந்த கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
சுதந்திர
காற்றை சுவாசிப்பதாக நினைத்து மாஸ்க்கை மறந்த ஓட்டுனர்களின் மூக்கு மற்றும்
தொண்டை குழியில் இருந்து சளி மாதிரிகளை எடுத்துக் கொண்டு அவர்களுடைய பெயர்
விவரம் மற்றும் செல்போன் எண்களையும் பெற்ற பின்னர் தனிமைப்படுத்தி இருக்க
வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அபராதம் விதித்தும் திருந்தாத
மக்கள், கொரோனா பரிசோதனை என்றால் திருந்துவார்கள் என்பதால் இந்த அதிரடி
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படி
மாஸ்க் இல்லாமல் வருவோரை பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதை பார்த்த
பலரும் தங்கள் வாகனங்கள் திருப்பிக் கொண்டு மாஸ்க் விற்கும் கடைகளுக்கு
சென்றதையும் காண முடிந்தது.