குருநாகல் தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா
By: Nagaraj Sun, 22 Nov 2020 2:49:18 PM
சுகாதார அதிகாரிகள் தகவல்... நுவரெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லிந்துலை- லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளிலுள்ள மூவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மூவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். லிந்துலை லிப்பகல தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர், தலவாக்கலை- சென்கிளயார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவராவார்.
கடந்த 16 ஆம் திகதி கொழும்பு- தெமட்டகொடை பகுதியில் இருந்து வந்து
தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இவர் இரகசியமாக தங்கியுள்ளார். எனினும்,
இவர் தொடர்பில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு தகவல்
கிடைத்ததையடுத்து பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை
முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன்,
அக்கரப்பத்தனை பெல்மோர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம்
காணப்பட்டுள்ளவர், கொழும்பு 12 பகுதியில் இருந்து வந்துள்ளார். இதனால்
அவரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை
முடிவுகள் வெளியான நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அதேவேளை,
கொழும்பில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர்
பூண்டுலோயா சீன் தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு கடந்த 16 ஆம் திகதி
வந்துள்ளார். பி.சி.ஆர். பரிசோதனை மூலம் அவருக்கு வைரஸ் தொற்று
உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இவர் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார்
என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். எனவே, அவருடன் தொடர்பில் இருந்த
50ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது சுய தனிமைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் குருநாகல் பிரதான தபால் நிலைய
ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
கூறப்படுகின்றது. குறித்த தபால் நிலையத்தில் பணியாற்றிய 60 பேருக்கு
மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதிலேயே குறித்த 14 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அடையாளம்
காணப்பட்டவர்களில் 7 உயரதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.