கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sat, 06 June 2020 11:19:07 AM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று முன்தினம் வரை 4,261 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கர்நாடகத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் புதிதாக 515 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 482 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
நாளுக்குள் நாள் வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து கொண்டே வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடலோர மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் இதுவரை கொரோனா பரவல் மற்ற பெரிய நகரங்களை காட்டிலும் கட்டுக்குள் உள்ளது. பெங்களூருவில் மக்கள்தொகை 1.20 கோடி. இருப்பினும் அங்கு கடந்த 2 மாதங்களாக அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 424 மட்டுமே.
கர்நாடகத்தில் இதுவரை 59 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,088 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அங்கு, இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.