பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
By: Karunakaran Mon, 17 Aug 2020 3:52:41 PM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சீனாவுக்கு வெளியே முதன் முதலில் கொரோனாவுக்கு உயிர் பலி ஏற்பட்டது பிலிப்பைன்ஸ் நாட்டில் தான். பிலிப்பைன்சில் இன்னமும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலி எண்ணிக்கை 2,600 கடந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை மந்திரியாக இருந்து வந்த எட்வர்டோ அனோவுக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதத்தில் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பூரண குணமடைந்தார். அதன்பின், தனது பணிக்கு திரும்பி அரசு வேலைகளை கவனித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரிடம் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டது. இதனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 2-வது முறையாக அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.