இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கியது
By: Karunakaran Sat, 04 July 2020 2:02:22 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையூம் உயர்ந்து கொண்டே வருவது சற்று ஆறுதலடைய செய்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 648315 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 18655 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 394227 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 235433 பேர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 192990 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 102721 பேருக்கும், டெல்லியில் 94695 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.