வுகான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் இல்லை; வைரலாஜி நிறுவன இயக்குனர் திட்டவட்ட தகவல்
By: Nagaraj Mon, 25 May 2020 12:28:34 PM
இல்லைவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்...சீனாவில் கொரோனா வைரஸ் முதன் முதலில் கிளம்பிய வுகான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் வவ்வால் கொரோனா வைரஸ்களின் 3 வகைகள் இருப்பதாகவும், ஆனால் அவை எதுவும் கொரோனா வைரசுடன் ஒத்துப்போகவில்லை என வைரலாஜி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 3.4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொடிய உயிர்கொல்லி வைரஸான இது முதலில் வெளவால்களில் உருவாகி பின்னர் மற்றொரு பாலூட்டிகள் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் சீனாவின் வுகானில் உள்ள ஆய்வகம் தான் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட பல தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வுகான் வைராலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாங் யானி, கொரோனா வைரஸ் தொடர்பாக சீன அரசின் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியதாக டிரம்ப் மற்றும் சிலர் கூறுவது முற்றிலும் கட்டுக்கதை. சார்ஸ் வைரஸ் பரவிய 2004-ம் ஆண்டு முதல், அதன் மூலத்தை கண்டறிய வெளவால்களின் கொரோனா வைரஸை ஆராய்ந்து வருகிறோம்.
தற்போது எங்களிடம் மூன்று வகை வெளவால் வைரஸ்கள் உள்ளன. ஆனால் அவை புதிய கொரோனா வைரஸின் மரபணு உடன் அதிகபட்சமாக 79.8% மட்டுமே ஒத்துப்போகிறது. டிசம்பர் 30 தேதி அறியப்படாத மாதிரிகளை பெற்றோம்.
ஜனவரி 2-ம் தேதி வைரஸின் மரபணு வரிசையை நிர்ணயித்தோம். ஜனவரி 11-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்துக்கு நோய்க்கிருமி பற்றிய தகவல்களை சமர்ப்பித்தோம். அதற்கு முன்பு இந்த வைரஸை சந்தித்ததில்லை, ஆராய்ச்சி செய்ததில்லை அல்லது வைத்திருக்கவில்லை.
எங்களிடம் இல்லாதபோது அது எப்படி எங்கள் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கும்? உண்மையில், எல்லோரையும் போலவே, எங்களுக்கும் கூட வைரஸ் இருப்பது தெரியாது. இவ்வாறு கூறியுள்ளார்.