பக்கத்து மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவு; முதல்வர் விளக்கம்
By: Nagaraj Sat, 22 Aug 2020 11:48:06 AM
பக்கத்து மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் 5,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 22வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,61,435 ஆக அதிகரித்துள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:
"தமிழகத்தைப்
பொறுத்தவரை நாளொன்றுக்கு சுமார் 68,000 கொரோனா பரிசோதனைகள்
செய்யப்படுகின்றன. அதில் 6,000-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா
பாதிப்பு இருப்பதாக முடிவுகள் வருகின்றன. இப்படி தொடர்ந்து அதிகளவிலான
பரிசோதனைகள் செய்யப்படுவதனால்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள்
உள்ளது.
பக்கத்து மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தொற்று
எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கத்
தேவையான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளன. இயல்பு நிலையைக் கொண்டு வர
அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழக மக்களும் அதற்கு ஒப்புதல் நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் கூறியுள்ளார்.