பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று
By: Karunakaran Fri, 14 Aug 2020 09:54:34 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் ஷென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்து பார்த்ததில், அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் உள்ள ஆலையில் இருந்து இந்த கோழி இறைச்சி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் அரசு தரப்பில் கூறுகையில், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீர்வாழ் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த கோழி இறைச்சியுடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தொடர்புடைய பிற தயாரிப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷான்டோங் மாகாணத்தின் வடக்கு நகரமான யெண்டாயில் இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவு பொருட்களின் 3 ‘பேக்கேஜ்’ மாதிரிகளை சோதிக்கப்பட்டது. அப்போது அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளதாக அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல், ஈக்குவடார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த இறால் ‘பேக்கேஜ்’ மாதிரியை உஹூ நகரில் சோதித்ததில் அதிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.