கொரோனா தொற்று மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல - பிரதமர்
By: Karunakaran Fri, 04 Sept 2020 09:35:44 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தோன்றி 8 மாதங்கள் கடந்த நிலையிலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த தொற்று, மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், நோய் எக்ஸ் மனித குலத்துக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது மிகப்பெரிய தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என 2018-ல் உலக சுகாதார அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று முதலில் பரவிய போதும், நோய் எக்ஸ் வந்துவிட்டதோ என்றுதான் சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் கொரோனா ஒரு உலக பேரிடர், ஆனால் நோய் எக்ஸ் அல்ல. கொரோனா தொற்று உலக அளவில் பரவிவரும் ஒரு வைரஸ் என்றாலும், இது மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
மேலும் அவர், எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கு தற்போதைய நெருக்கடி நிலையின் பாடங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 56,908 ஆக உள்ள நிலையில், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.