திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,514 ஆக உயர்வு
By: Monisha Sat, 15 Aug 2020 3:59:47 PM
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,514 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 015 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும், 5 ஆயிரத்து 514 பேர் பலியாகி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா அறிகுறி காணப்பட்டவர்கள், ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியவர்களுடன் பழகியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் கொரோனா முகாம்களில் பலருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் மாவட்ட நிர்வாகத்தால் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று தச்சூர், கிழக்கு ஆரணி, திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி, சேத்துப்பட்டு, புதுப்பாளையம், நாவல்பாக்கம், பெரணமல்லூர், வந்தவாசி உள்பட மாவட்டம் முழுவதும் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனை மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8,514 ஆக உயர்ந்துள்ளது.