விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,300 ஆக உயர்வு
By: Monisha Tue, 08 Sept 2020 10:04:57 AM
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 97 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,300 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 589 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 6,246 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
மாவட்டத்தில் இதுவரை 12,589 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 48 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 274 பேர் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,300 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை 1040 ஆக குறைந்துள்ளது.
பொதுப்போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்திய நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனையை குறைத்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.