கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10,441 ஆக உயர்வு
By: Monisha Wed, 11 Nov 2020 6:30:09 PM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 441-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 10 ஆயிரத்து 431 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 202 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 105 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று 360 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 431-ல் இருந்து 10 ஆயிரத்து 441-ஆக உயர்ந்தது.
தொற்று ஏற்பட்டவர்களில் 90 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கொரோனா தடுப்பு மையங்களில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.