ரஷிய அதிபர் புதினை சந்திக்க வருபவர்களுக்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை
By: Karunakaran Thu, 18 June 2020 11:01:19 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், ஹோண்டுராஸ் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ் என பல நாட்டின் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவிலும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா பிரதமர் மிக்கைல் மிசுஸ்டினுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை தலைமை டாக்டருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரையும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்துள்ளார். இதனால், அதிபர் புதின் தனக்கு கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் அவர், மாஸ்கோவிற்கு வெளிப்புறத்தில் உள்ள அதிபர் குடியிருப்பில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும், அதிபர் புதினை சந்திக்க வரும் அனைவரும் சந்திப்பிற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அதிபரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிபரின் குடியிருப்பு அவரை சந்திக்க வருபவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தின் வழியாகவே வரவேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.