தலைமை செயலகத்தில் இதுவரை 250 பேருக்கு கொரோனா பரிசோதனை
By: Monisha Tue, 09 June 2020 09:21:39 AM
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 1,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பரவலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இங்கு நாளுக்கு, நாள் தொற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. சென்னைக்குள் இருக்கும் முக்கிய அலுவலகமான தலைமை செயலகத்தையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அங்கு வரும் பணியாளர்களில் 44 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தலைமை செயலகத்தில் கொரோனா தொற்றை தடுக்க தீவிர பரிசோதனையில் அரசு இறங்கியுள்ளது. சானிடைசர், சோப்பு உள்ளிட்டவற்றை தேவையான அனைத்து இடங்களிலும் அரசு வைத்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து இதுவரை 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பணியாளர்கள் வருவதால், தலைமை செயலகத்தில் தொற்று அபாயம் உள்ளது. எனவே சமுக இடைவெளிக்கு வழிவகுக்கும் வகையில் 50 சதவீத பணியாளரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.