டெல்லி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை; பரிசோதனை முடிவு வெளியானது
By: Nagaraj Wed, 10 June 2020 09:44:48 AM
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகளவு இருந்து வருகிறது. இதற்காக முதல்வர், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என்று அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனாவுக்கு எதிரான போரில் கடந்த சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்றின் அறிகுறி இருப்பது போல் தென்படுவதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுகுறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து முதல்வர் கெஜ்ரிவால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா இல்லை. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
கடந்த 2 தினங்களாக லேசான காய்ச்சல் இருந்ததை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா இருக்க வாய்ப்பு உள்ளதாக வெளிவந்த செய்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது