வடகொரியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்
By: Karunakaran Sun, 26 July 2020 7:17:53 PM
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகானில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அதன்பின் கொரோனா வைரஸ் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 1 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவி வந்தநிலையில், இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தது. தற்போது தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபர் கிம் ஜாங் உன் உயரதிகாரிகளுடன் இதுகுறித்து அவரச ஆலோசனை நடத்தி நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கொரியாவில் தற்போது ஒரு நாளைக்கு 40 முதல் 60 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். வடகொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.