இந்தியாவில் கொரோனா இறப்புவீதம் 2.15 சதவீதமாக குறைந்தது
By: Karunakaran Sun, 02 Aug 2020 5:21:29 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு வீதம் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா இறப்புவீதம் என்பது 3.33 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது படிப்படியாக குறைந்து 2.15 சதவீதமாகி உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து பதிவான குறைந்த அளவு இதுதான் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து சிகிச்சைக்கு பின் குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வது, கொரோனா நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதம் 64.53 சதவீதம் ஆக உள்ளது. தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்புகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா ஆஸ்பத்திரிகள், கொரோனா சுகாதார மையங்கள், கொரோனா பராமரிப்பு மையங்கள் என மூன்றடுக்கு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 65 ஆயிரத்து 103 ஆக உள்ளது.