ஜார்க்கண்டில் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை
By: Karunakaran Sat, 22 Aug 2020 3:37:29 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை உடனே மருத்துவத்துறையினர் தனிமைப்படுத்துகின்றனர். இதனால், கொரோனா நோயாளிகள் சற்று மனநலம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க பல அறிவுரைகளை மருத்துவ துறையினர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையம் அமைந்துள்ளது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இங்கு கார்வா மாவட்டத்தில் வசித்து வந்த 32 வயது வாலிபர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அந்த வாலிபர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த ராஞ்சி போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.