மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி கூவம் நதியில் பிணமாக கண்டெடுப்பு
By: Monisha Sat, 20 June 2020 12:54:23 PM
தமிழகத்தின் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும், சென்னையில் 1300க்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனைகளில் இருந்து தப்பித்துச் செல்லும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 65 வயது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காணாமல் போனார். அவரை தேடும் பணியில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் நதியில் ஒருவரை பிணமாக போலீசார் கண்டுபிடித்தனர். அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா நோயாளி தான் என்று மருத்துவமனை ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி கூவத்தில் விழுந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.