கொரோனா தடுப்பு பணிகளில் மெத்தனம் கூடாது; மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவுறுத்தல்
By: Nagaraj Wed, 10 June 2020 09:43:45 AM
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
''கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், மற்ற நாடுகளை விட, நாம் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அதேநேரத்தில், வைரஸ் தடுப்பு பணிகளில் மெத்தனமாக இருக்கக் கூடாது,'' என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் உயர்மட்டக் குழு கூட்டம், டில்லியில் நடந்தது.
இதில், வைரஸ் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தற்போதைய நிலை, பாதிப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்ததும், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:
வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஐந்தாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டாலும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் சமூக விலகலை பின்பற்றுவதை, அந்தந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். முக கவசம், கையுறை ஆகியவற்றை ஊழியர்கள் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.
வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் சிறப்பாக உள்ளன. அதேநேரத்தில், தடுப்பு பணிகளில் கொஞ்சமும் மெத்தனமாக இருந்து விடக் கூடாது. பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். தங்களை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்ய சேது செயலியை, அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் ஆரோக்கியத்தை, அரசால் உறுதி செய்ய முடிவதுடன், அவர்களது உடல் நலத்தையும் கண்காணிக்க முடியும். இதுவரை நாடு முழுதும், 12.55 கோடி பேர், இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
சுகாதார அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சுகாதார கட்டமைப்பு வசதி பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக, நாடு முழுதும், 958 பிரத்யேக மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இவற்றில், 1.67 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. மேலும், 21 ஆயிரத்து, 614 தீவிர சிகிச்சை பிரிவுகளும் செயல்படுகின்றன.
இதுதவிர, ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய, 73 ஆயிரத்து, 469 படுக்கை வசதிகளும் உள்ளன. இவை தவிர, கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக, பிரத்யேகமாக, 2,313 சுகாதார மையங்களும் செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.