கொரோனா தடுப்பு பொருட்களை விற்பனை செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு
By: Karunakaran Fri, 26 June 2020 10:05:49 AM
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்நிலையில், ரெயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரெயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் பன்னோக்கு கடைகள் நடத்தப்படுகிறது. இந்த கடைகளில் ரெயில் பயணிகளுக்கு தேவையான தண்ணீர், பாக்கெட் உணவுகள், புத்தகங்கள், மருந்துகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்த கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
முக கவசம், கிருமி நாசினி, கையுறை, படுக்கை விரிப்புகள் போன்ற அனைத்து கொரோனா தடுப்பு பொருட்கள் ரெயில் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு பொருட்களை எடுத்துவர பயணிகள் மறந்தாலும் ரெயில் நிலையங்களிலேயே அவற்றை வாங்கிக் கொள்ள முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நெருக்கடி காலத்தில் பயணிகள் கொரோனா அச்சமின்றி பயணிக்க இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.