இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது; இந்திய மருத்துவ சங்க மோங்கா எச்சரிக்கை
By: Nagaraj Sun, 19 July 2020 10:49:35 AM
கொரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளது... இந்தியாவில் கொரோனா சமூகப்பரவலாக மாறியுள்ளதாக இந்திய மருத்துவ சங்க மருத்துவமனை வாரியத் தலைவர் வி.கே. மோங்கா எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் நேற்றுடன் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 10.38 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 34,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய மருத்துவ சங்க மருத்துவமனை வாரிய தலைவர் வி.கே. மோங்கா கூறுகையில், ''கொரோனா பாதிப்பு அதிவேகமாகியுள்ளது. ஒவ்வோரு நாளும் 30,000 -க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டுக்கு இது மோசமான சூழல் ஆகும். கொரோனா அதி வேகமாக பரவ பல காரணிகள் உள்ளன.
இப்போது, கிராமங்களிலும் வேகமாக கொரோனா பரவுவது மோசமான அறிகுறியாகும்.
இதனால், கொரோனா சமூகப்பரவலை எட்டி விட்டதாக கருத வேண்டியதுள்ளது. நகரங்கள் ,
கிராமங்களில் கொரோனா வேகமாக பரவி வருவதால் கட்டுப்படுத்துவது கடினம் ''
என்று தெரிவித்துள்ளார்
கோவிட் -19 சமூக பரவலாக மாறவில்லை என மத்திய
சுகாதார அமைச்சகம் கூறி வரும் நிலையில், இந்திய மருத்துவ சங்க மருத்துவமனை
வாரியத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு
அடுத்த படியாக இந்தியா உள்ளது. இதுவரை 6,53,751 பேர் கொரோனாவில் இருந்து
முற்றிலும் குணமடைந்துள்ளனர். 26, 273 பேர் பலியாகியிருக்கின்றனர்.