தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 61 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா பரிசோதனை
By: Monisha Tue, 28 July 2020 09:18:53 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டது. அந்த தகவலில் பாதிப்பு, பலி, சிகிச்சை மற்றும் பரிசோதனை தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளது.
மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 723 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 77 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 61 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 14 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை விரைவாக கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும். எனவே, தமிழக அரசு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.