தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
By: Monisha Fri, 09 Oct 2020 11:28:37 AM
சென்னை அண்ணாநகர் மண்டலம் என்.எஸ்.கே சாலையில் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் 2-ம் கட்ட மருத்துவ முகாமை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 'ஜீரோ சர்வே' மூலம் 2-வது கட்டமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர்களுக்கு 68 நாட்களுக்கு பிறகு மீண்டும், எந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதை கண்டறியும் ஆய்வை தொடங்கி உள்ளோம்.
தமிழகத்தில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இரவு நேரங்களிலும் மருத்துவ முகாமை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூரில் எந்தளவு பாதிப்பு ஏற்படுகிறதோ, அதேஅளவுக்கு பரிசோதனையையும் அதிகப்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.