அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
By: Monisha Tue, 15 Dec 2020 12:12:58 PM
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில் சிலருக்கும், பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் விடுதியில் இரண்டு பேருக்கு காய்ச்சல் இருந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அந்த இரண்டு மாணவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என்பது தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் நோய் தோற்று பரவல் மற்றும் பாதுகாப்புக் கருதி தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். இரண்டு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடக்கிறது.