உள்நாட்டில் தயாரித்த எலிசா கருவிகளை கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்
By: Karunakaran Sat, 06 June 2020 10:13:15 AM
இந்தியாவில் கொரோனா தொற்றினை கண்டறியும் ஆர்.டி.-பி.சி.ஆர். கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகள் தரம் குறைந்தவையாக உள்ளன. பயன்படுத்த முடியாத நிலையில் அவை இருந்ததால், மீண்டும் அவை சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன .
இந்த பரிசோதனை கருவி தட்டுப்பாடு காரணமாக வளர்ந்த நாடுகளைப்போல பொதுமக்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளை அதிகரிக்க முடியவில்லை. இந்நிலையில், நமது உள்நாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து எலிசா கருவிகளை உருவாக்கின.
இதனைக்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிற ஒத்துழைப்பாளர்களுடன் இணைந்து நடத்திய ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த கருவி 92.37 சதவீதம் உணர்திறன் கொண்டதாக இருக்கும் எனவும், இதன் நேர்மறை கணிப்பு மதிப்பு 94.44 மற்றும் எதிர்மறை கணிப்பு மதிப்பு 98.14 சதவீதமாக உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை செய்வதற்கும், தொற்று நோயியல் ஆய்வுகளுக்கும் இந்த எலிசா கருவிகளை பயன்படுத்தலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கருவி மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான நபர்களுக்கு பரிசோதனைகளை நடத்தலாம்.
இந்த ஆய்வின்போது 513 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதில் எலிசா பரிசோதனை நம்பகமானது என கண்டறியப்பட்டுள்ளது.