காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருக்கு கொரோனா
By: Nagaraj Sun, 06 Sept 2020 6:47:07 PM
மாநிலங்களவை உறுப்பினருக்கு கொரோனா... காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீபேந்திர சிங் ஹூடாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதில் மருத்துவர்கள், காவலர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடாவின் மகனும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான தீபேந்திர சிங் ஹூடாவிற்கு தற்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ''எனக்கு செய்யப்பட்ட
கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
மருத்துவர்களின் அறிவுரைகளின்படி மற்றம் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு
தனிமைப்படுத்திக் கொண்டேன்.
அனைவரது ஆசிர்வாதத்தாலும் சீக்கிரம்
குணமடைந்து திரும்புவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்'' என்று கேட்டுக்
கொண்டுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் வதோதரா
பகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக தீபேந்திர ஹூடா சுற்றுப்பயணம்
மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா முதல்வர் மனோகர் லால்
கட்டாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.