குமரி மாவட்டத்தில் தற்போது 745 பேருக்கு கொரோனா சிகிச்சை; மாவட்ட கலெக்டர் தகவல்
By: Monisha Fri, 11 Sept 2020 5:02:50 PM
குமரி மாவட்டத்தில் தற்போது 745 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 052 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், கொரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 745 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 9,783 பேர் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி திரிந்த 43 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.4 ஆயிரத்து 300 வசூலானது. இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.