தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் பாதிப்பு: 307 பேர் பலி
By: Monisha Wed, 10 June 2020 12:19:52 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7745 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 206 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதிகபட்ச பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக 1685 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 34,914 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும் நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1685 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1243 பேர்கள் என்பதும், இதனால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 24 ஆயிரத்து 545ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று கொரோனாவில் இருந்து 798 பேர் குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 21 பேர்கள் பலியாகியுள்ளதால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 13 ஆயிரத்து 219 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 621,171 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.