இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி இருப்பது கழிவுநீரில் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிப்பு
By: Karunakaran Sun, 21 June 2020 11:07:00 AM
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக, இத்தாலில் இதுவரை 34 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதல் நபர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் இருந்து உலக நாடுகள் முழுவதும் பரவியதாகவும் தகவல்கள் வெளியாகின. உலகின் பெரும்பான விஞ்ஞானிகள் சீனாவில் டிசம்பருக்கு முன்னதாகவே கொரோனா பரவிவிட்டது எனவும், அதனை சீனா மறைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு வெளியே கொரோனாவுக்கு முதலில் இத்தாலி நாடு பாதிக்கப்பட்டது.
இத்தாலியில் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் முறையாக 3 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட சில நாட்களிலே அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் கொரோனா அந்நாட்டில் அதிவேகமாக பரவியது. இதுகுறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர். தற்போது இத்தாலியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கொரோனா பரவியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்நாட்டில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மிலன் மற்றும் துரின் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட கழிவு நீரை ஆய்வு செய்தபோது, அதில் கொரோனா வைரஸ் பரவி இருப்பதை கண்டறிந்தனர். நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட கழிவு நீரை ஆய்வு செய்தபோது, அதில் கொரோனா வைரஸ் இல்லை. முதல் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.