கொரோனா வைரஸ் குறைவதற்கு முன் மேலும் மோசமடையலாம் - அதிபர் டிரம்ப்
By: Karunakaran Wed, 22 July 2020 08:50:08 AM
அமெரிக்காவில் கொரோனா பரவ ஆரம்பித்த முதலே அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிவரங்களை தினமும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாத இறுதிக்கு பின், கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் மேற்கொண்டுவந்த சந்திப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தற்போது 3 மாதங்களுக்கு பின் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொடர்பாக வெள்ளைமாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்கள் குறித்து அதிபர் டிரம்ப் பேசினார். அமெரிக்க நாட்டில் வைரஸ் மேலும் மோசமடையலாம் என அதிர்ச்சி தகவலை அதிபர் டிரம்ப் கூறினார்.
அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தபோது, அமெரிக்காவில் சில பகுதிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் சில பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், துரதிஷ்டவசமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறையும் முன்னர் இன்னும் மோசமடையலாம். அமெரிக்காவில் வாழும் அனைவரிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத இடங்களில் மாஸ்க் அணியுங்கள். நானும் எங்கு சென்றாலும் மாஸ்க் கொண்டு செல்கிறேன். நீங்கள் நினைக்கும் நாட்களை விட மிகமிக விரைவில் கொரோனா தடுப்பூசி நமக்கு வந்துவிடும் என்று கூறினார்.