புதுச்சேரியில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Wed, 10 June 2020 5:35:57 PM
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது:- "புதுச்சேரியில் தற்போது புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற 12 பேரும் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 84 ஆகவும், மாநிலத்தில் மொத்த பாதிப்பு 145 ஆகவும் உள்ளது.
புதுச்சேரியில் இன்று சிசிச்சை பெற்று வந்த மொத்தம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,752 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 8,548 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 61 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது.
ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சரியான தகவல்களைத் தராததால் தொற்று கண்டறிவதில் காலதாமதமாகிறது.
புதுச்சேரியில் உள்ள 121 சுகாதார மையங்களிலும் பாதுகாப்புக் கவசம், பிபிஇ பாதுகாப்புக் கவசங்கள் முன்னேற்பாடாக வழங்கி வருகிறோம். ஆகவே அவற்றுக்குத் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.