2 ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு
By: Karunakaran Sat, 22 Aug 2020 1:28:37 PM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2 ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார். உலகமயமாதால், நெருக்கம், தொடர்பில் இருத்தல் போன்றவை நமக்கு குறைபாடுகளாக உள்ளது. ஆனால் நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை உள்ளது. ஆகையால், இந்த கொரோனா தொற்றை நாம் 2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என்று ஆதனாம் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று டெட்ரோஸ் ஆதனாம் பேட்டி அளித்தபோது, தற்போது இருக்கும் யூக்திகளை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். கூடுதலாக கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் நாம் இந்த வைரசை 1918 ஆம் ஆண்டு உருவான ஸ்பானிஷ் புளூ முடிவடைந்த காலகட்டத்திற்கு முன்னரே இதை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என்று கூறினார்.
1918 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பானிஷ் புளூ என்ற வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 5 கோடி பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நீடித்த பின்னர் தான் இந்த கொடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து உலகம் பழைய நிலைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.