மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்
By: Karunakaran Fri, 21 Aug 2020 3:43:20 PM
இந்த நூற்றாண்டில் இதுவரையில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. அந்த அளவுக்கு மனிதர்களிடையே கொரோனா வைரஸ் ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் சொல்லும் அளவிற்கு கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜி.ஓ.கியூ.ஐ.ஐ. என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிற ஒருங்கிணைந்த தடுப்பு சுகாதார தள நிறுவனம் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. இவர்கள் மனித வாழ்க்கையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி 10 ஆயிரம் பேரை பேட்டி கண்டனர்.
இந்த ஆய்வில், முதல் 21 நாள் ஊரடங்கின்போது, இந்தியாவின் சராசரி தூக்க நேரம் அதிகரித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அது குறைந்துள்ளது. இந்தியர்கள் இப்போது ஒழுங்கற்ற தூக்க பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள். 44 சதவீதம்பேர், வழக்கத்தை விட தாமதமாக தூங்கச்சென்றிருக்கிறார்கள். 10 சதவீதம்பேர், 2 மணி நேரம் தாமதமாக எழுந்து இருந்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.
முதல் ஊரடங்கு போடப்பட்டபோது, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஜிம் போன்ற உடற்பயிற்சி, உடல் தகுதி கூடங்கள் மூடப்பட்டதால் 47 சதவீதத்தினர் வீடுகளில் உடற்பயிற்சி செய்து தங்களை சுறுசுறுப்பாக்கி கொண்டனர். இந்த மாதிரி பயிற்சி எதுவும் செய்ய முடியாதோரின் எண்ணிக்கை ஊரடங்குக்கு முன்னர் 11 சதவீதமாக இருந்தது, ஊரடங்குக்கு பின்னர் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. சாப்பாட்டை பொறுத்தமட்டில், ஊரடங்குக்கு முன்னர் வாரம் 1 முறைக்கு மேல் 32.1 சதவீதத்தினர் வெளியே ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டனர். தற்போது, 70 சதவீதத்தினர் வீட்டில் சமைத்த உணவுமுறையையே முழுமையாக பின்பற்றுவதாக கூறி உள்ளது தெரிய வந்துள்ளது.