தெலுங்கானாவில் ஒரே நாளில் 23 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
By: Karunakaran Mon, 15 June 2020 09:18:51 AM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு எதிராக ஒவ்வொரு நாடும் போராடி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தெலுங்கானாவில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கொரோனா பாதிப்புகளை குறைக்க அம்மாநில அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 737 ஆக உள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 182 ஆக உள்ளது. இந்நிலையில் அங்கு ஒரே நாளில் 23 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.