அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் பரோன் டிரம்பிற்கும் கொரோனா பாதிப்பு
By: Karunakaran Thu, 15 Oct 2020 12:33:07 PM
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மொத்தம் 3 மனைவிகள், 5 குழந்தைகள். முதல் மனைவி இயாவா மூலம் ஜான் டிரம்ப், எரிக் டிரம்ப் என்ற மகன்களும், இவாங்கா டிரம்ப் என்ற மகளும் என 3 பேர் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்த பின் 1993-ம் ஆண்டு மர்லா ஆன் மப்லஸ் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர் மூலம் டிப்னி டிரம்ப் என்ற மகள் உள்ளார்.
அதன்பின்னர் மெலனியாவை 2005 ஆம் ஆண்டு டிரம்ப் திருமணம் செய்தார். மெலனியா மூலம் பரோன் டிரம்ப் என்ற மகன் உள்ளான். 14 வயது நிரம்பிய பரோன் டிரம்ப் தனது தாய் மெலனியா மற்றும் தந்தை அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் வாழ்ந்து வருகிறான். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்ட்டதாக தெரிவித்து வருகிறார். ஆனால், அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் குணமடையவில்லை.
தற்போது, அதிபர் டிரம்ப்-மெலனியாவின் மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா தொற்று பரவியிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவனானா பரோனுக்கு எப்போது வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை மெலனியா டிரம்ப் வெளியிடவில்லை. பரோனுக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும், ஆனால் தற்போது அவன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் மெலனியா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே பரோன் டிரம்பிற்கு வைரஸ் தொற்று பரவிய தகவலை முதலிலேயே வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.