பிரேசில் அதிபரின் மூத்த மகன் ஜெயீர் ரீனன் போல்சனாரோவுக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Thu, 27 Aug 2020 09:27:26 AM
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு உள்ளது. பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ முழுமையான ஊரடங்கு பிறப்பிப்பதிலும், முக கவசம் அணிவதிலும் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தார். இதனால் தான் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிபர் ஜெயீர் போல்சனாரோவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். அதன்பின், அவரின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி அதிபர் ஜெயீர் போல்சனாரோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் 20 நாட்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
அவரது மனைவி மிச்செல் போல்சனாரோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரம் வைரஸ் தொற்றில் இருந்து மிச்செல் குணமடைந்த நிலையில் போல்சனாரோவின் 2-வது மகன் ஜெயீர் ரீனன் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரரும் போல்சனாரோவின் மூத்த மகனுமான பிளேவியா போல்சனாரோவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை பிரேசில் நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினரான பிளேவியா போல்சனாரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மூலம் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதாக கூறியுள்ளார்.