வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு; ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை
By: Nagaraj Sun, 07 June 2020 7:52:37 PM
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா... மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஊடக பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனிப்படுத்தல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் போது இந்த நிலைமை கூடுதல் சிக்கலாகும் என கொரோனா தடுப்பு செயலணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டணம் அறவிடாமல் இருப்பதற்கு லெபனான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மீண்டும் நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமையினால் லெபனான் வழங்கும் இந்த உதவி பாரிய அளவு பணத்தை மீதப்படுத்த உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக கொரோனா பரவல் அதிகரித்த நாடுகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு பிசிஆர் பரிசோதனை அந்தந்த நாடுகளில் மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக என ஆராய்ந்து பார்க்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.