அமெரிக்க கடலோர காவல்படை துணைதளபதிக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Wed, 07 Oct 2020 09:25:25 AM
அமெரிக்காவில் வெள்ளைமாளிகையை தொடர்ந்து தற்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையிடமான பென்டகனிலும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. வெள்ளைமாளிகையில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு பின்பே அதிபர், உள்பட முக்கிய அதிகாரிகளுக்கு கொரோனா பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி வெள்ளைமாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க கடலோர காவல்ப்படை துணைதளபதியான சார்லஸ் ரே பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடமான பென்டகனில் நடந்த நிகழ்ச்சிகளிலும் சார்லஸ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அந்நாட்டின் பாதுகாப்புத்துறையின் அனைத்து தலைமை தளபதிகளும், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அதிபர் டிரம்பிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வெள்ளைமாளிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற கடலோர காவல்ப்படை துணைதளபதி சாரலசுக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் பென்டகனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. இருப்பினும் முப்படை தலைமை தளபதி உள்பட அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தளபதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.