ஒரே நாளில் 1 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; உலக சுகாதார நிறுவனம் தகவல்
By: Nagaraj Thu, 21 May 2020 1:24:27 PM
நேற்று ஒரே நாளில் 94 ஆயிரத்து 813 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில், ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில்லாத வகையில் அதிக அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கையில், புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் குறிப்பிட்ட நான்கு நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 50 லட்சத்து 11 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 94 ஆயிரத்து 813 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் ஒரே நாளில் 4 ஆயிரத்து 589 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது.