இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது
By: Karunakaran Fri, 26 June 2020 1:21:52 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றாலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இதுவரை 4,90,401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக 407 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 15301 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 3.1 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,85,637 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவிலிருந்து குணமடையும் விகிதம் 58.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 1,89,463 பேர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.