இந்தியாவில் கொரோனா மொத்த உயிரிழப்பு 12948 ஆக அதிகரிப்பு
By: Karunakaran Sat, 20 June 2020 1:34:06 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று காலை வெளியான தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 395048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 14516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 375 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளதால், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12948 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உயிரிழப்பு விகிதம் 3.3 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 124331 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 5893 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 62773 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 54449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 23512 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 30271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லியில் 53116 பேருக்கும், குஜராத்தில் 26141 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு தமிழகத்தை விட அதிக அளவில் உள்ளது. டெல்லியில் 2035 பேரும், குஜராத்தில் 1618 பேரும் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மேற்கு வங்கத்தில் 529 பேரும், உத்தர பிரதேசத்தில் 488 பேரும், மத்திய பிரதேசத்தில் 495 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.