திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆக உயர்வு
By: Monisha Tue, 09 June 2020 4:35:00 PM
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 64 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று திருவாரூர் சிவம் நகரை சேர்ந்த 64 வயதுடைய ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேபோல் திருவாரூர் புலிவலம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, வடுவூர் தென்பாதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவர், கூத்தாநல்லூர் தாலுகா வேர்குடியை சேர்ந்த 37 வயது வாலிபர், குடவாசல் செல்லூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து 6 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 25 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.