கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,417 ஆக அதிகரிப்பு
By: Karunakaran Sun, 14 June 2020 10:58:17 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,417 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 18 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவார்கள். மேலும், கேரளாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.