கொரோனாவின் 2-வது அலை வீசினால் சர்வதேச அளவில் 34 கோடி முழு நேர வேலைகள் பறிபோகும்
By: Karunakaran Thu, 02 July 2020 2:59:00 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி உலகளவில் 1 கோடியே 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கானோரின் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளும் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் எழுச்சி அடைந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோசமான நிலையில் உள்ளன. இதனால் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மானிட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில், உலகளாவிய வேலை நேரத்தில் 14 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2020- ஆண்டின் இரண்டாவது பாதியில் நிலைமை, இரண்டாவது காலாண்டில் இருந்தது போலவே சவாலாக இருக்கும். கொரோனாவின் 2-வது அலை வீசினால், அது சர்வதேச அளவில் 34 கோடி முழு நேர வேலைகளை பறித்து விடும் ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.