டெல்லியில் ஒரே நாளில் 3,460 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sat, 27 June 2020 09:35:06 AM
சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகம் மற்றும் டெல்லி உள்ளது. டெல்லியில் கொரோனா தாக்கம் சமூக பரவலாக மாறி வேகமாக பரவி வருகிறது.
தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,460 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77,240 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 2492 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தற்போது டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.