வங்காளதேசத்தில் ஒரே நாளில் 3,489 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Thu, 09 July 2020 09:22:45 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனா காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வங்காளதேச நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.72 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் அங்கு 3,489 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,72,134 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 46 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,197 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவில் இருந்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, வங்காளதேசநாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம் பிரான்சை பின்னுக்குத் தள்ளி 17-வது இடத்தில் உள்ளது. .உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. மேலும், மூன்றாவது இடத்திலிருந்த ரஷ்யாவை இந்தியா பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.